புதுவை மாநில கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் - திமுக அறிவிப்பு!
puducherry DMK protest announce
புதுவை மாநில எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. 7 நாட்களில் இதை அமல்படுத்த கூறியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த அறிவிப்பு புதுவை மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும், அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும். பிரெஞ்சு மொழியைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது.
மேலும், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலைவாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையைச் சிதைக்கும் இத்தகைய எதேச்சதிகார மொழித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புதுவை மாநில திமுக சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
puducherry DMK protest announce