விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...! தமிழக அரசிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!
Premalatha Vijayakanth urges Tamil Nadu government to put an end price hikes
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. வருமானத்தில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான செலவுகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமானிய மக்களின் குடும்பப் பொருளாதாரம் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாத வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே செலவாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குடும்பத்தின் பிற தேவைகளை சமாளிப்பதிலும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வை வெறும் சந்தை நிலவரமாக மட்டும் கருதாமல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக தமிழக அரசு அணுக வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மக்கள் பொருளாதார நெருக்கடியின்றி நிம்மதியாகவும், கண்ணியமாகவும் வாழக்கூடிய சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Premalatha Vijayakanth urges Tamil Nadu government to put an end price hikes