இன்று செய்தியாளர்களை சந்திக்கும் மருத்துவர் இராமதாஸ்.! தமிழகத்தில் முதல் கட்சியாக வெளியாகிறது அறிவிப்பு.!
PMK Manifesto 2021 today
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளன.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு, அதிமுக - பாமக இடையே ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக தனது தேர்தல் பணிகளை முடுக்கில் விட்டுள்ளது. முதல்கட்டமாக பாமகவினர் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் கட்சியாக பாமக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது.
இதுகுறித்து முன்னதாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று (05.03.2021 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.