717 டாஸ்மாக் கடைகள் மூடல்: உயர் நீதிமன்றம் பாராட்டு; இடத்தின் உரிமையாளர்கள் மனு தள்ளுபடி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளதோடு, அரசின் முடிவை எதிர்த்து இட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான  தவேக அரசு, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் 02 வாரங்களுக்குள் மூடப்படும் என மே 12-ஆம் தேதி தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை பத்திரிகை செய்தி குறிப்பை வெளியிட்டிருந்தது.

ஆனால், அந்தச் செய்திக் குறிப்பை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஆர்.ஏ.புரம் மற்றும் வேளச்சேரியில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ள அடையாரை சேர்ந்த சரவணன் மற்றும் மதியரசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; கடைகளை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டு, 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடைகளை மதுபானக் கடைகளாக மாற்றுவதற்காக, பெரும் தொகை செலவு செய்து தேவையான உள் அலங்ககார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைகளை மூடுவதால் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் அமைக்கப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள கடைகள் அகற்றப்படும் என்ற பத்திரிகை செய்தி குறிப்பு தன்னிச்சையானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, மதுவிலக்குச் சட்டத்தில் அனைத்து விதிகளும், அறிவிப்புகளும் அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் கையெழுத்தில்லாமல் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்திகுறிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞ்சர் விஜய் நாராயண் ஆஜராகி முந்தைய ஆட்சி காலத்தில் இடத்தை குத்தகைக்கு கொடுத்தவர்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிர்வாகம் திருப்பிக் கொடுத்துவிடும் என்றும், புதிய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 717 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் முடிவு நல்ல முடிவு என்றும், முதல்வரின் முடிவுக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், இடத்தின் உரிமையாளர்கள் அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petition by Landlords Against Closure of 717 TASMAC Shops Dismissed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->