ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தி அனுமதி...! - விஜய் மேடையேரும் ஈரோடு
Permission granted after paying fee 1 lakh Vijay takes stage Erode
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலப்பரப்பில், வரும் 18-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசார பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

இதற்காக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, த.வெ.க. சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையே, கடந்த 12-ஆம் தேதி விஜயபுரி அம்மன் கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி, கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் த.வெ.க. உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் சட்டசிக்கலும் குழப்பமும் நீடித்தது.இந்த இழுபறி சூழ்நிலைக்கு மத்தியில், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த இறுதியாக அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் தனலட்சுமி கூறுகையில், “த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள, வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரமும், அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தோம்.
அந்த தொகையை அவர்கள் செலுத்தியுள்ளனர். மேலும், கூட்டம் நிறைவடைந்ததும் கோவில் நிலப்பரப்பை முழுமையாக சுத்தம் செய்து ஒப்படைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
English Summary
Permission granted after paying fee 1 lakh Vijay takes stage Erode