அரசியல் லைம்லைட்டில் மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன்: சீனியர்களின் கூடாரமாகும் தவெக! திணறும் திராவிட கட்சிகள்?
Panruti Ramachandran back in the political limelight The tent of the seniors is a trap Dravidian parties struggling
தமிழக அரசியலில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள், கட்சிகளுக்குள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்திருந்த அரசியல் அடையாளங்களையே மாற்றும் அளவுக்கு தீவிரமாக நகர்ந்து வருகின்றன. இந்த மாற்றங்களின் நடுவே, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் அரசியல் லைம்லைட்டில் தோன்றியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலகட்டங்களில் அதிமுகவின் முக்கிய அரசியல் மூளையாகக் கருதப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டநுணுக்கங்கள், தேர்தல் வியூகங்கள், டெல்லி அரசியல் புரிதல் என அனைத்திலும் ஆழமான அறிவு கொண்டவர் என்பதால், “பண்ருட்டியார் டெல்லி செல்கிறார்” என்ற செய்தியே தமிழக அரசியல் களத்தை கலங்கடிக்கும் அளவுக்கு இருந்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கடும் அதிகாரப் போட்டி, உள்பிரிவுகள் மற்றும் அடையாளச் சிக்கல்களை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தப்படுவதற்கு திரைமறைவில் ஆலோசகராக செயல்பட்ட முக்கிய நபராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். அதனால்தான் ஓபிஎஸ் மட்டுமல்ல, சசிகலாவும் கூட அவரை தங்களின் பக்கம் இழுக்க முயன்றதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமைதியான செயல்பாடு, நேரம் பார்த்து நகரும் அரசியல் பாணி கொண்ட பண்ருட்டியார், நீண்ட காலமாக ஆலோசகர் என்ற பாத்திரத்திலேயே இருந்தார். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் அணி என்டிஏ கூட்டணியில் இணைந்ததன் மூலம் அந்த அணியின் தனித்துவ அடையாளம் மங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். இந்த சூழல், “ஆலோசகர் என்ற அளவிற்கு மட்டும் என்னை கட்டுப்படுத்துவது என் அனுபவத்துக்கும் அரசியல் பார்வைக்கும் பொருந்தாது” என்ற எண்ணத்தை பண்ருட்டியாரிடம் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விலகி, “எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க.” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இது உண்மையாகும் பட்சத்தில், தற்போதைய அதிமுக தலைமையின்மீது ஒரு மறைமுக விமர்சனமாகவே இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பெயரும், பழைய அதிமுக மரபும் மீண்டும் அரசியல் மேடையில் உயிர்ப்பிக்கப்படலாம் என்ற கணக்கே இதன் பின்னணி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) உடன் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், பண்ருட்டியார் தவெகவுடன் இணைந்தால், அந்த கட்சிக்கு அரசியல் முதிர்ச்சியும், வியூக ரீதியான தெளிவும் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.
விஜய் தனது மேடைகளில் எம்.ஜி.ஆர். பற்றிய பேச்சை தொடர்ச்சியாக முன்வைத்து வரும் நிலையில், “எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க.” என்ற பெயரில் ஒரு அணியை தவெகவுடன் இணைத்தால், எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுகவின் பாரம்பரிய ‘ரத்தத்தின் ரத்தங்கள்’, மற்றும் அதிருப்தி தொண்டர்களை ஒரே நேரத்தில் ஈர்க்க முடியும் என்ற கணக்கும் பேசப்படுகிறது. இது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரிய சிதறலை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படும் பட்சத்தில், வன்னியர் சமூக ஆதரவையும் தவெகவால் எளிதாக அணுக முடியும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒருகாலத்தில் விஜயகாந்துடன் பண்ருட்டியார் இருந்தபோது தேமுதிக கம்பீரமாக இருந்ததும், அவர் விலகிய பின்பு அந்த கட்சி மெல்ல கரைந்து போனதும் அனைவரும் அறிந்த வரலாறே.
இந்த எல்லா காரணங்களையும் கூட்டிப் பார்க்கும்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்கும் திருப்பமாக மாறலாம். அவர் தனிக்கட்சி தொடங்கினாலும், தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும், அந்த நகர்வு அரசியல் கணக்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொறுத்திருந்து பார்ப்பதே, அடுத்த கட்ட அரசியல் கதையின் பதிலை சொல்லும்.
English Summary
Panruti Ramachandran back in the political limelight The tent of the seniors is a trap Dravidian parties struggling