"2 மணி நேரம் டாய்லெட்டிலேயே இருந்தார்"! உதயநிதி மறக்கவே மாட்டார்! ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்
He stayed in the restroom for two hours Udhayanidhi will never forget this Aadav Arjuna scathing criticism
பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, கைது நடவடிக்கை தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
கூட்டத்தில் பேசிய அவர், "சட்டப்பேரவை மரபுகளை இன்றும் உண்மையாகக் கடைப்பிடித்து வரும் இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். நமக்கு அனுபவம் இல்லை, சட்டப்பேரவையை எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்கள். ஆனால் 60 ஆண்டுகளாக இருந்த அரசியல் நடைமுறையையே நாம் மாற்றியிருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், "ஆட்சி அமைந்து 80 நாட்களாகியும், இந்த அரசை எப்படி கவிழ்ப்பது என்பதில்தான் திமுக கவனம் செலுத்தி வருகிறது. கொளத்தூருக்கு முதல்வர் விஜய் ஒருமுறை சென்றதற்கே அவர்கள் பதற்றமடைந்தனர். இனி திமுக குடும்பத்தில் யாரும் முதலமைச்சராக முடியாது" என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "திமுக ஆர்ப்பாட்டத்தில் தவறாக எதுவும் பேசவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை அவரது தாய் அல்லது மகள் முன் பேச முடியுமா? ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, "சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே கர்நாடகா செல்ல முடிவு செய்தார். சகோதரத்துவத்தை வளர்க்கவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
மேலும், "ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை, மூன்று மாதங்களில் தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் முதல்வர் செயல்பட்டு வருகிறார்" என்றும் தெரிவித்தார்.
உதயநிதி கைது விவகாரம் குறித்து பேசுகையில், "பெண்களை இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். உதயநிதியை புரட்சியாளராக காட்ட முயற்சி நடைபெறுகிறது. ஆனால் காவல்துறை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது, காலை 8.15 மணிக்கு கழிவறைக்குள் சென்ற அவர், 10.15 மணி வரை வெளியே வரவில்லை. இரண்டு மணி நேரம் கழிவறைக்குள் இருந்த அந்த சம்பவத்தை அவர் வாழ்க்கையில் மறக்க முடியாது" என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.
English Summary
He stayed in the restroom for two hours Udhayanidhi will never forget this Aadav Arjuna scathing criticism