இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின்ராவத் வீரமரணம் : பாகிஸ்தான் இராணுவம் போட்ட ட்வீட்.!
PAKISTAN ARMY MOURNING
கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவ மற்றும் 13 பேருடன் இன்று பிற்பகலில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விழுந்து நொறுங்கிய உடன், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மனவேதனை அளிக்கிறது.
இந்தியாவிற்காகவும், உயிரிழந்த குடும்பங்களுக்காக பூடான் மக்களும், நானும் பிரார்த்தனை செய்கிறோம்” என்று பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, பாகிஸ்தான் ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். "இந்திய நாடு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்" என்று அந்த இரங்கல் செய்திகள் தெரிவித்துள்ளது.