தமிழகத்தில் பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.. வெளியான கோரிக்கை.!!
ops statement for public exam
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் "பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல்வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் ஒரளவு குறைந்ததையடுத்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை
காரணமாக இந்த மாத துவக்கத்திலிருந்தே பல்வேறு இடங்களில் பள்ளிகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டு மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையும், அதற்கான பாடத் திட்டங்களை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அனைவர் மத்தியிலும் வலுத்து வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு, வாரத்திற்கு ஆறு நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் இருக்கும் வகையில் வகுப்பறைகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், பெரும்பாலான பள்ளிகளில் இடப் பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில், அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவ, மாணவியர் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பும் அதற்குப் பின்பும் ஆன்லைன் மூலம் வகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், மோசமான இணையதளத் தொடர்பு மற்றும் மின்வெட்டு காரணமாக மாணவ மாணவியரின் வருகை குறைவாக இருந்தது என ஆசிரியர்கள் குறிப்பிடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் சென்ற மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து, நவம்பர் மாத துவக்கத்திலிருந்தே கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாறி, மாறி விடுமுறை விடப்பட்டன. சில இடங்களில் பள்ளிகளில் நீர் தேங்கி இருந்ததன் காணமாகவும், சில இடங்களில் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே நீர் தேங்கி இருந்ததன் காரணமாகவும் மாணவ, மாணவியரால் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
பொதுத் தேர்வுக்கான தயார் நிலையில் தொடர்ச்சி இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், இன்னும் உள்ள எஞ்சிய காலத்தில் குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களைக் கூட முடிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும், சில பாடங்கள் நீக்கப்பட்டாலும், சிறப்பான புரிதலுக்காக அவற்றையும் படிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், மொத்தத்தில் குறுகிய காலத்தில் முழுப் பாடத் திட்டத்தையும் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதில் வெகுவாக பாதிக்கப்படுபவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவியர்தான் என்றும், பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து தெளிவான முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் தெரிவிப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை என்பது இயல்பாக டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை இருக்கும் என்றாலும், தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தில் வடகிழக்கு பருவ மழை எத்தனை நாள் நீடிக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் டிசம்பர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்துள்ள நிலையில், இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, எஞ்சியிருக்கின்ற காலங்களில் பாடத் திட்டங்களை முடிப்பது என்பது மிகவும் சிரமம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. மாணவ், மாணவியர் பொதுத் தேர்விற்கு தயாராவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பாடத் திட்டங்களை ஓரளவுக்குக் குறைப்பதும், பொதுத் தேர்வினை மே மாதத்தில் நடத்துவதும் தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது என்றும், கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, மாணவ, மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்குத் தயாராக வழிவகுக்காது. பாடத் திட்டங்களை குறைத்து பொதுத் தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையவர்களை அழைத்துப் பேசி, மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ops statement for public exam