முதலமைச்சரை சந்தித்ததில் எந்தவிதமான அரசியலும் இல்லை - ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்.!!
ops explain cm mk stalin meet issue
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போதிலிருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தற்போது முதல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில், சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு நேரம் ஒதுக்கபடாததால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அறிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே கடந்த 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் இரண்டு முறை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைவாரா? என்றும் கேள்வி எழும்பியது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் எந்தவிதமான அரசியலும் இல்லை. மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சரை நேரில் சென்று நலம் விசாரித்தேன். மேலும், மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காகச் சென்றேன். இந்த சந்திப்பை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல். என்னுடைய மனைவி, தாயார் இறந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நான் திமுகவில் இணைப்போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். முதலமைச்சருடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.
வருகின்ற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலேயே முதலமைச்சரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ops explain cm mk stalin meet issue