அடுத்தும் திமுக ஆட்சி தான்... அந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்... ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
O Panneerselvam DMK ADMK EPS BJP TVK
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவாலயத்தில் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று மருதுபாண்டியர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
மருதுபாண்டியர்களின் வீரமும் தியாகமும் உலக அளவில் போற்றப்படுகின்றது. அவர்களின் நினைவாக இன்று சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவித்தேன்.
தற்போது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது. இது நீடித்தால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னையில் சந்தித்து பேசுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கியபோது, பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதியை உருவாக்கினார். இதை மாற்றக்கூடாது என்பதும் அவரின் தெளிவான நிலைப்பாடு. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு, 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்டச் செயலாளர்கள் ஆதரித்தாலே பொதுச் செயலாளர் தேர்வு செய்யலாம் என சட்ட திருத்தம் செய்துள்ளது.
இந்த மாற்றம் கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. இதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். தற்போது அந்த வழக்கு சென்னை சிவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் இறுதி தீர்ப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
English Summary
O Panneerselvam DMK ADMK EPS BJP TVK