திருச்சி காவல்துறையினர் பனைத்தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மை - சீமான் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ள நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கள்’ இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் திருச்சி காவல்துறையினர் சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்.

மருத்துவக் குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தபடும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "K001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. 

அதிலும், தற்போது திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ள பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக் கூடாது என்பதற்காக, உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ சமயபுரம் காவல்துறையினர் பொய் வழக்கு புனைந்துள்ளது எதேச்சாதிகாரப் போக்கின் உச்சமாகும். கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே அதில் நச்சு கலந்தது என்ற முடிவுக்குக் காவல்துறை வந்தது எப்படி? இதிலிருந்தே காவல்துறையின் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் யாவும் முற்றிலும் புனையப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிறது.

உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனித தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, பனையேறும் தொழிலாளர்களைத் தேடித்தேடி வேட்டையாடுவது வெட்கக்கேடானது. அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால், சட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும். சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.

ஆகவே, திருச்சி மாவட்டம் இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பனைத் தொழிலாளர்களையும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Condemn to DMK Govt tn police


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->