2 ஆண்டுகளாக பதவியும் இல்லை! மரியாதையும் இல்லை.. மீண்டும் ஏமாற்றிய பாஜக.. தவெக பக்கம் நகரும் முடிவில் சரத்குமார்?
No position or respect for two years Betrayed by the BJP again Is Sarathkumar deciding to shift towards TVK
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமாருக்கு இதுவரை தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படாத நிலையில், அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா அல்லது மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குவதா என்பது குறித்து சரத்குமார் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்த சரத்குமார், பாஜகவில் இணைந்தார். அப்போது அவரது மனைவி ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து சரத்குமாருக்கு கட்சியில் முக்கியமான தேசியப் பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அண்ணாமலையின் அழைப்பின் பேரிலேயே சரத்குமார் பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அதன்பிறகு தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் சரத்குமார் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்தார். அவருக்கு விரைவில் தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரத்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தற்போது பாஜகவில் தேசிய அளவிலான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் சரத்குமாருக்கு எந்த முக்கியப் பதவியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சரத்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சியும் இந்த அரசியல் பின்னணியில்தான் நடைபெற்றதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து சரத்குமார் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராதிகாவுக்கும், விஜய்க்கும் இடையே இருக்கும் நெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை தவெகவில் இணையும் முடிவு சாத்தியமாகவில்லை என்றால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கும் எண்ணத்தையும் சரத்குமார் பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுதொடர்பாக இன்னும் ஓரிரு மாதங்களில் சரத்குமார் இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சரத்குமாரை பாஜகவிலேயே தொடர்ந்து வைத்திருக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சரத்குமார் பாஜகவிலிருந்து விலகுவது, தவெகவில் இணைவது அல்லது மீண்டும் தனிக்கட்சி தொடங்குவது குறித்து இதுவரை அவரது தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
No position or respect for two years Betrayed by the BJP again Is Sarathkumar deciding to shift towards TVK