சிஜேபியுடன் 03-ஆம் கட்ட பேச்சுவார்த்தை; தர்மேந்திரா பிரதான் ராஜினாமாவுக்கு வாய்ப்பில்லை..? டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்..!
No chance of Dharmendra Pradhans resignation
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை கரப்பான்பூச்சி கட்சி பிரதிநிகளுடன், மத்திய அரசின் பிரதானிகள் 03-ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்திகின்றனர்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 01 கோடி ரூபாய் நிவாரணம், கடந்த 20-ஆம் தேதி டெல்லியில் நடந்த 'சலோ சன்சாத்' பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய 03 முக்கிய கோரிக்கைகளை சிஜேபி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் நேற்று 02 மணி நேரம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மாணவர்கள் மீதான வழக்கு ரத்து மற்றும் நிவாரணத் தொகை ஆகிய 02 கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. இன்று மாலை 03-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து சிஜேபியின் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
'ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. அதற்கு ஒன்றிய அரசு சம்மதிக்காவிட்டால், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.

இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளை சீக்கிரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன. அத்துடன், டெல்லி போலீசார் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் களப்பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நேற்று தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிநீக்கம் செய்துள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்ட வரைவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன், இந்த வழக்குகளின் விசாரணையை 03 மாதங்களுக்குள் முடிக்கவும், விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் திங்கள்கிழமை (நாளை மறுநாள்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், மாணவர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேநேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி வந்தாலும், அவர் பதவி விலகும் வாய்ப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கும், நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு மத்தியிலும், தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி விலக கோரும் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவோம் என்று கூறி மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மற்றும் அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது போன்ற பிற கோரிக்கைகளில் மத்திய அரசு இணக்கம் தெரிவித்த போதிலும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
No chance of Dharmendra Pradhans resignation