'டெல்டாவில் விளம்பரம் வேண்டாம்.. நீர்நிலைகளை உடனே தூர்வாருங்கள்'...! - விஜய் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த நெத்தியடி...!
No advertising Delta Clean up water bodies immediately Edappadi Palaniswami slap Vijay government
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள் தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், “அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் முன்பே, டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடிகால் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்வழித்தடங்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டன.

இதனால் பாசன நீர் எந்த தடையும் இன்றி விவசாய நிலங்களின் கடைமடை பகுதிவரை சென்றடைந்தது” என தெரிவித்துள்ளார்.மேலும், “மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்காமல் விரைவாக வெளியேறும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனது தலைமையிலான அம்மா அரசில், தூர்வாரும் பணிகள் மற்றும் ஆற்றுப்பாதை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் பதிவு பெற்ற விவசாய சங்கங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டதால், அந்த பணிகள் முழுமையான தரத்துடன் நடைபெற்றன” என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “விவசாயிகளே நேரடியாக பங்கேற்று தூர்வாரும் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, பாசன வசதி மேம்பட்டு விளைச்சல் அதிகரித்தது. அதன் காரணமாக அம்மா ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் ‘கிருஷி கர்மான்’ விருது 6 முறை கிடைத்தது” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “இந்த ஆண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலிலேயே டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர அவசரமாக தூர்வாரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அலட்சியமான பணிகளால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாத அபாய நிலை உருவாகியுள்ளது” என எச்சரித்துள்ளார்.
மேலும், “வடிகால் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை வெள்ளநீர் தேங்கி விவசாய நிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக கொள்ளிடம் ஆறு, கோரையாறு, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் கிளை ஆறுகள் பிரியும் பகுதிகளில் ஆகாயத் தாமரைகள் அதிகளவில் பரவி நீரோட்டத்தை தடை செய்கின்றன.
அவற்றை கட்டுப்படுத்த நிரந்தர தடுப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.இறுதியாக, “புதிய அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களின் அனைத்து நீர்நிலைகளிலும் தேங்கி கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
No advertising Delta Clean up water bodies immediately Edappadi Palaniswami slap Vijay government