அதிமுக - பாஜக கூட்டணி.. தொகுதி பங்கீட்டை நாங்கள் தான் முடிவு செய்வோம்..!! வானதி சீனிவாசன்..!!
NDA will decide the seat distribution
அதிமுக பாஜக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட வடக்கு பாஜக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ் தலைமை தாங்கிய நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களில் இதே போன்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக ஒரே புள்ளியில் கூடியிருக்கும் ஒவ்வொருவரும் குடும்ப அரசியல், ஊழல் அரசியல் செய்து அவர்களின் சுயநலத்திற்காக கட்சியை நடத்துகிறார்கள்.
திறமையாகவும் நேர்மையாகவும் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாக 16 பேர் அல்ல, இன்னும் 100 பேர் சேர்ந்து வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. இந்திய மக்களின் ஆதரவு பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட்டுகள், எத்தனை கட்சிகள், எத்தனை தொகுதிகள் என்பதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும். அதிமுக பாஜக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை" என்ன செய்திகளை சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
NDA will decide the seat distribution