டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் ரத்து; எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது அரசின் திட்டமிட்ட சதியா?; நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
Nainar Nagendran condemns the cancellation of TNPSC Group exams questioning if it is a planned conspiracy by the government
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் திமுக அரசு..!
தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தார்மீகப் பொறுப்பு.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran condemns the cancellation of TNPSC Group exams questioning if it is a planned conspiracy by the government