'10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வணிக உரிமத்தில் இயங்கும் பாலகங்கள் அமைக்கப்படும்'; அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!
Minister Vijayalakshmi announced that 10 new Aavin stations will be set up under commercial licensing
கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 குளிர்விப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.25.45 கோடியில் நிறுவப்படும் என்றும், 10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் வணிக உரிமம் முறையில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயலட்சுமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் பின்வருமாறு;
ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறன் மேம்படுத்த விஞ்ஞானப் பூர்வமான, கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
50 ஆயிரம் கறவை மாடுகளில் கன்று ஈனும் கால இடைவெளியைக் குறைக்கும் வகையில் இனவிருத்தி மேலாண்மை பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 குளிர்விப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.25.45 கோடியில் நிறுவப்படும்.
15 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் தூய பால் உற்பத்தி குறித்து பயிற்சி மற்றும் 700 ஒன்றிய பணியாளர்கள் மற்றும் 1,000 சங்க பணியாளர்களுக்கு ரூ.1.76 கோடியில் தர மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.
100 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை மேம்படுத்தும் விதமாக ரூ.8.81 கோடியில் துணை உபகரணங்கள் நிறுவப்படும்.
ஈரோடு ஒன்றியத்தில் உள்ள தர ஆய்வகத்துக்கு ரூ.31.5 லட்சத்திலும், திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தர ஆய்வகத்துக்கு ரூ.11.25 லட்சத்திலும் கூடுதல் உபகரணங்கள் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அம்பத்தூர் பால்பண்ணை ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.
பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறப்பாக செயல்படும் முதல் மூன்று பால் உற்பத்தியாளர்கள், மகளிர் பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்கச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 'ஆவின் வெற்றி விருதுகள்' மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
'ராஷ்டிரிய கோகுல் மிஷன்' திட்டத்தின் கீழ், ரூ.5.18 கோடியில் 112 சிறந்த மரபியல் திறனுள்ள பொலிகாளைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஜெர்சி கலப்பின பொலிகாளை பண்ணைகளுக்கு வழங்கப்படும்.
தரமான பசுந்தீவன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 25 மெட்ரிக் டன் பசுந்தீவன புல் விதைகள் 5 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் வணிக உரிமம் முறையில் அமைக்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வணிக உரிமத்தில் இயங்கும் பாலகங்கள் அமைக்கப்படும்.
பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தடமறிதல் மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில் பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் முறை ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும்.
English Summary
Minister Vijayalakshmi announced that 10 new Aavin stations will be set up under commercial licensing