ஆட்சியை கவிழ்க்க சதி... பின்னணியில் உதயநிதி, ஸ்டாலின்... அமைச்சர் நிர்மல்குமார் பகீர் குற்றச்சாட்டு!
Minister Nirmalkumar Says Stalin and EPS Must Resign to Save DMK and AIADMK
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசி தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த பேரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
வெறும் பண பலத்தை மட்டுமே நம்பி செந்தில் பாலாஜி போன்றவர்களை வைத்துக்கொண்டு திமுக இந்த குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சாடினார். முப்பது நாட்களில் தவெக ஆட்சி கவிழும் என்று எந்த தைரியத்தில் மு க ஸ்டாலின் திருமண வீடுகளில் பேசினார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் சாதிக்காத ஸ்டாலின் தற்பொழுது ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் முப்பது முதல் நாற்பது கோடி ரூபாய் வரை கொடுத்து ஆட்சியைப் பிடிக்கத் தயாராகிவிட்டதாகக் கூறினார். வாக்குகளுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து பழகியவர்கள் இப்பொழுது எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கலாம் என்று தவறாகக் கணக்கு போட்டுள்ளதாக அவர் விமர்சித்தார். தவெக அரசு மக்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் மு க ஸ்டாலின் இருவரையும் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஐம்பது ஆண்டுகளாக எம்ஜிஆரை திமுக எப்படி விமர்சித்ததோ அதேபோலவே தற்பொழுது முதல்வர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார் என்றார். முதல்வர் விஜய்யைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறிய அவர், ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் தங்களது கட்சிகளுக்கு நல்லது செய்ய விரும்பினால் உடனடியாகப் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும், அவர்கள் விலகினால்தான் திமுக மற்றும் அதிமுகவை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். இந்த குதிரை பேரத்திற்குப் பின்னால் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தூண்டுதல் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதில் தொடர்புடைய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைச் சந்திப்பார்கள் என்று எச்சரித்தார்.
English Summary
Minister Nirmalkumar Says Stalin and EPS Must Resign to Save DMK and AIADMK