விமான நிலையத்தில் குவிய தடை…! விஜய் வருகையால் காவலர்கள் கடும் எச்சரிக்கை...!
Massive restrictions airport Police high alert Vijay arrival
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், காலை 11 மணி முதல் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேரடியாக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மேடையை அடைகிறார்.
பின்னர், பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்து பேச உள்ளார்.விஜயை நேரில் காணும் ஆர்வத்தில் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
காலை முதலே பொதுக்கூட்ட இடத்திற்கு தொண்டர்கள் திரளாக குவிந்து வருகின்றனர்.இந்த நிலையில், விஜய் கோவை விமான நிலையம் வருகையை முன்னிட்டு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விமான நிலையத்தில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், நுழைவாயில்களில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் அல்லாதவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
English Summary
Massive restrictions airport Police high alert Vijay arrival