அரசு செவிசாய்க்குமா? 5,000 ஏக்கர் நிலம் பாழாகும் அபாயம்! - தண்ணீர் கேட்டு விவசாயிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை
government heed their plea 5000 acres land risk being ruined final warning issued by farmers demanding water
காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை, தனது வருடாந்திர கால அட்டவணைப்படி கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மூடப்பட்டது.இருப்பினும், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் அறுவடைப் பணிகள் முடங்கியதோடு, சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகளும் கணிசமான காலதாமதத்திற்கு உள்ளாகின.
இதனால், முதிர்ச்சியடையாத நெற்பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகத் தொடங்கின. பயிர்களைக் காப்பாற்ற பிப்ரவரி இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து நீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் அடுத்த 15 நாட்களுக்குத் தடையின்றித் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினர். திருவையாறு புறவழிச்சாலையில் கருகிய நெற்பயிர்களை ஏந்தியபடி திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், டிராக்டர்களைக் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"தண்ணீர் இன்றித் தவிக்கும் பயிர்களைக் காப்பாற்று!" என விண்ணதிர முழக்கமிட்டு மறியலில் அமர்ந்தனர்.இந்த தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குமுறலை வெளிப்படுத்திய விவசாயிகள், "ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம்; உடனடியாகத் தண்ணீர் கிடைக்காவிட்டால் இந்தத் தாலுகாவில் மட்டும் சுமார் 5,000 ஏக்கர் சாகுபடி பாழாகிவிடும்.
பெரும் நஷ்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்" என முறையிட்டனர்.மேலும், அதிகாரிகள் தரப்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தத் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
government heed their plea 5000 acres land risk being ruined final warning issued by farmers demanding water