'வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி'...! - விஜய் நடித்த 'பிகில்' படத்தின் அசல் வசூல் நிலவரத்தை வெளியிட்ட ஏஜிஎஸ்...!
End to rumours AGS released original collection status Vijay starrer Bigil
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ மற்றும் ‘பிகில்’ திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.‘பிகில்’ திரைப்படத்தின் உருவாக்கத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு, படத்தின் தலைப்பில் தனது பெயர் இடம்பெற்றதன் பின்னணி, திரைப்படத்தின் வசூல் மற்றும் லாபம் தொடர்பாக நிலவி வரும் கருத்துகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி தனது பேட்டியில் கூறியதாவது,"இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவான ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. அந்தப் படத்தின் பணிகளில் நானும் நேரடியாக ஈடுபட வேண்டும் என்று நடிகர் விஜய் எனது தந்தையிடம் தெரிவித்தார்.மிகப்பெரிய பொருட்செலவில் திரைப்படம் உருவாக இருந்ததால், அதன் பணிகளை பொறுப்புடன் கவனிப்பதற்கு கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர்.
இதையடுத்து, விஜய் என்னை இயக்குநர் அட்லீயிடம் அறிமுகப்படுத்தி, படத்தின் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுமாறு கூறினார்.அந்த வாய்ப்பு எனது திரைப்பயணத்தில் முக்கியமான அனுபவமாக அமைந்தது” என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.‘பிகில்’ திரைப்படத்திற்கு முன்பு தான் பணியாற்றிய எந்தப் படத்திலும் தனது பெயர் இடம்பெற்றதில்லை என்றும் அர்ச்சனா கல்பாத்தி குறிப்பிட்டுள்ளார்.“இந்தப் படத்தில் நான் செய்த பணியை அங்கீகரிக்கும் வகையில் எனது பெயரையும் படத்தின் தலைப்பில் சேர்க்க வேண்டும் என்று விஜய், எனது தந்தையிடம் கூறினார்.
அதன்பிறகுதான் ‘பிகில்’ படத்தில் எனது பெயர் இடம்பெற்றது.எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.‘பிகில்’ திரைப்படம் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு முக்கியமான கருத்துக்கும் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.
எங்கள் நிறுவனம் இதுவரை தயாரித்த திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படம் ‘பிகில்’தான். அதே நேரத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிக அதிக லாபத்தை பெற்றுத் தந்த திரைப்படமும் அதுவே.ஆனால், ‘பிகில்’ திரைப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக ஒரு தவறான தகவல் பல ஆண்டுகளாக பரவி வருகிறது. உண்மையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் திரைப்பயணத்தில் அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் ‘பிகில்’தான்.
ஆனால், இந்த உண்மை சரியான முறையில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை” என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், “இயக்குநர் அட்லீ வைத்திருந்த மிகப்பெரிய கதைப் பார்வை மற்றும் திரைப்பட உருவாக்கத்தின் மீதான நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
அதனால்தான் அதிக பொருட்செலவில் ‘பிகில்’ திரைப்படத்தை உருவாக்கத் துணிந்தோம்.படத்தின் பிரம்மாண்டம், உருவாக்கம் மற்றும் அதன் மீதான எங்களது நம்பிக்கை ஆகியவை அந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தியின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘பிகில்’ திரைப்படத்தின் உருவாக்கம் மற்றும் அதன் வர்த்தக வெற்றி குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
English Summary
End to rumours AGS released original collection status Vijay starrer Bigil