போதை இல்லா தமிழகம் அமைக்க மாஸ் பிளான்...! சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி...!
Mass plan establish drug free Tamil Nadu Chief Minister Vijay pledge Chennai State College students
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப் பொருட்கள் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.போதைப் பழக்கத்தின் தீமைகளை உணர்ந்து, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழியை மாநிலம் முழுவதும் ஏற்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முதலமைச்சர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும், போதைப் பொருள் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு காவலர்களை பாராட்டி, முதலமைச்சர் விஜய் விருதுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியைப் போலவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க உள்ளனர்.
போதைப் பொருட்களின் பாதிப்பிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதுடன், சமூகத்தில் விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இது அமைய உள்ளது.போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 26-ந்தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.
மெரினாவில் நடைபெற்ற அந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து அவரும் ஓட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mass plan establish drug free Tamil Nadu Chief Minister Vijay pledge Chennai State College students