திமுகவில் அதிரடி மாற்றம்! பவர் சென்டராக மாறும் கழகம்! செயற்குழு கூட்டத்தில் உதயநிதி கொண்டு வரும் மாற்றம்!
Major shake up in the DMK The party is transforming into a powerhouse Changes to be introduced by Udhayanidhi at the executive committee meeting
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திமுகவின் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்கள் உள்ளன. இதனை இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் பிரித்தால், மாவட்டங்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால், அவற்றுக்கு மாவட்டச் செயலாளர்களாக யாரை நியமிப்பது என்பதே கட்சிக்குள் முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து ஒரு தரப்பிலும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து மற்றொரு தரப்பிலும் நிலவுகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் Gen Z தலைமுறையினரை அரசியலில் ஈர்க்கும் வகையில் திமுகவில் புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது. இதனால் இளைஞரணி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை உதயநிதி ஸ்டாலின் தரப்பு முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தேர்தல் நடத்தப்பட்டால் ஏற்கனவே உள்ள கோஷ்டி பூசல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், அதற்கு உதயநிதி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் இளைஞரணி நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்கலாம் என உதயநிதி தரப்பு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், மூத்த நிர்வாகிகளை முழுமையாக புறக்கணித்தால் அவர்களிடையே அதிருப்தி ஏற்படலாம் என்பதால், இளைஞர்களுக்கும் மூத்தவர்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள், மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் வெற்றி பெறுமா? அல்லது வழக்கம்போல் மூத்த நிர்வாகிகளுக்கே மாவட்டப் பொறுப்புகள் வழங்கப்படுமா? திமுகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் இந்த செயற்குழு கூட்டம் முக்கிய திருப்பமாக அமையுமா? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Major shake up in the DMK The party is transforming into a powerhouse Changes to be introduced by Udhayanidhi at the executive committee meeting