ரிசர்வ் வங்கியின் நிர்வாக வாரியத்தின் பகுதிநேர இயக்குனராக இஸ்ரோ முன்னாள் தலைவர் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு..!
Former ISRO chairman appointed as part time director of Reserve Bank of Indias board of directors
ரிசர்வ் வங்கியின் நிர்வாக வாரியத்தின் பகுதிநேர இயக்குனராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றி பல்வேறு விண்வெளி சாதனைகளைப் படைத்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் எஸ்.சோமநாத் ஓய்வு பெற்றார். பெங்களூரு அருகே உள்ள சாணக்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக வாரியத்தில் பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குனராக எஸ்.சோமநாத் 04 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில், வரும் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்தராவின் பதவிக்காலமும் ரிசர்வ் வங்கி வாரியத்தில் மேலும் 04 ஆண்டுகளுக்கு பகுதிநேர இயக்குனராக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய நிர்வாக வாரியத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, துணை ஆளுநர்கள் சுவாமிநாதன் ஜே, பூனம் குப்தா, எஸ்.சி.முர்மு, ரோகித் ஜெயின், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், நிதிச் சேவைகள் செயலாளர் சஞ்சய் லோஹியா, முன்னாள் துணை சி.ஏ.ஜி அதிகாரி ரேவதி ஐயர் மற்றும் சச்சின் சதுர்வேதி ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
English Summary
Former ISRO chairman appointed as part time director of Reserve Bank of Indias board of directors