நீண்ட வரிசை... நீடிக்கும் காத்திருப்பு...! - திருவண்ணாமலை கோவிலில் அமைச்சர் அதிரடி ஆய்வு...!
Long queue long wait Minister conducts inspection Tiruvannamalai temple
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.விடுமுறை நாட்கள், பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிப்பதால், கோவில் வளாகத்தில் நீண்ட வரிசை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதனால், பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு கூடம் வழியாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், பிஸ்கட், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர், பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பொது தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள், தங்களது சிரமங்களை அமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைத்தனர்.விஐபி தரிசனத்திற்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், பொது தரிசன வரிசையில் காத்திருப்பவர்களுக்கு சாமி தரிசனம் செய்வதில் கூடுதல் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
பக்தர்களின் குறைகளை பொறுமையாக கேட்ட அமைச்சர் ரமேஷ், முதன்முறையாக இந்த கோவிலில் ஆய்வுக்கு வந்துள்ளேன். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
அமைச்சரின் திடீர் ஆய்வைத் தொடர்ந்து, பக்தர்களின் நீண்ட நேர காத்திருப்புக்கு தீர்வு காணவும், பொது தரிசனத்தை மேலும் விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
English Summary
Long queue long wait Minister conducts inspection Tiruvannamalai temple