கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிர் தரப்பு காணவில்லை.. ஈரோடு கிழக்கு குறித்து கே.எஸ் அழகிரி பேச்சு..!!
Ks Alagiri says there is no opposition in the Erode East byelection
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். இதனால் வலுவான கூட்டணியுடன் காங்கிரஸ் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ளது.

அதேபோன்று தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் இன்று அல்லது நாளை அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி "ஈரோடு கிழக்கு தொகுதியின் களத்தில் நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய தோழமைக் கட்சிகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள்.
ஆனால் ஈரோட்டில் தேடி தேடி பார்க்கிறோம் எதிர் தரப்பு கண்ணு கட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் அவர்களுக்கு ரொம்ப படிப்பினை தந்துள்ளது. நாங்கள் ஈரோடு களத்தில் மகத்தான வெற்றியை பெறுவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
English Summary
Ks Alagiri says there is no opposition in the Erode East byelection