பரபரப்பான சூழலில் சபாநாயகர் பேட்டி! கர்நாடக அரசியலில் நடக்கப்போவது என்ன?!
Karnataka speaker ramesh kumar press conference
கர்நாடகாவில் ஆட்டச்சிக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்கள். உச்சநீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரடியாக சந்திக்க வேண்டும், ராஜினாமா கடிதத்தினை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இதனையடுத்து மும்பையில் இருந்த அவர்கள் பெங்களூர் வந்து சபாநாயகரை சந்தித்தார்கள். அவர்களுக்கான பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என கர்நாடக காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களுடனான சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டியளித்தார். அப்போது, சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது, யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்த அவர், மேலும் என்னை பற்றி தவறான தகவல் வருகிறது. அவர்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த அரைமணி நேரம் முன்பு வரை என் அலுவலகத்தில் தான் இருந்தேன். அப்போது தான் என் சொந்த பணிகளுக்காக அலுவலகத்தில் இருந்து சென்றேன். மாறாக, இவர்களும் யாரும் என்னிடம் முன் அனுமதி வாங்கவில்லை என்று கூறினார்.
மேலும் ராஜினாமா கடிதத்தினை என் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு செல்லுங்கள் செவ்வாய் அன்று சந்திப்பதாக கூறியிருந்தேன். ஆனால் ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு, எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன், ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன், ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே சபாநாயகர் இன்றுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka speaker ramesh kumar press conference