அதிமுகவுக்கு பாதிப்பில்லை! எங்களின் வெற்றி உறுதி! - அதிமுக ஜெயக்குமார் தடாலடி!!
Jayakumar said AIADMK is not affected in alliance decision
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே பல மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த மோதலானது தற்போது கூட்டணி முறிவை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எதிர்வினை ஆற்றி வந்தனர். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை டெல்லி தலைமை கண்டிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை பொருட்படுத்தாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் தனது நடை பயணத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாக பத்திரிகையில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திடீரென அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர் "எங்கள் தலைவர்கள் மீதான தொடர் விமர்சனங்களை ஏற்க முடியாது. அண்ணாமலை ஏற்கனவே எங்கள் தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்தார்.
அப்போது அண்ணாமலைக்கு எதிராக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் அண்ணா, பெரியார், ஈபிஎஸ் ஆகியோரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இதை எந்த ஒரு அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நாளை களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய வேண்டும். எனவே வேறு வழியின்றி இதை அறிவித்தோம். இந்த முடிவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களின் வெற்றி உறுதி" என தெரிவித்துள்ளார்.
English Summary
Jayakumar said AIADMK is not affected in alliance decision