நள்ளிரவில் டேங்கர் லாரியில் பயங்கரம்...! - அரிவாள்களுடன் தாக்கிய 3 பேர் கைது...!
Horror tanker truck at midnight 3 people who attacked machetes arrested
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் கோபு (60), லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லைச் சேர்ந்த கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மடத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கேஸ் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்துள்ளார்.

பணி முடியும் வரை காத்திருந்த கோபு, கம்பெனி வளாகத்தின் வெளியே உள்ள சர்வீஸ் சாலையில் டேங்கர் லாரியை நிறுத்தி, அதில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், இரவு சுமார் 11 மணியளவில், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் லாரி கதவைத் தட்டி திறக்குமாறு அழைத்துள்ளார்.
சந்தேகம் இல்லாமல் கதவைத் திறந்த கோபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அரிவாள்களுடன் வந்த மூன்று வாலிபர்கள் சூழ்ந்து கொண்டு, செல்போன் மற்றும் பணத்தை வழங்குமாறு மிரட்டியுள்ளனர்.
இதற்கு கோபு கடுமையாக எதிர்த்து போராடியதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், அரிவாளால் அவரது தலையில் சரமாரியாக வெட்டியதுடன், டேங்கர் லாரியின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த கோபுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். விசாரணையில், தூத்துக்குடி மடத்தூர் துரைசிங் நகரைச் சேர்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமார் (20), வாழாவெட்டி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (19) மற்றும் மடத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஜெயம் மகன் காமராஜ் (எ) காமேஷ் (18) ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து அரிவாள்களையும் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கொடூர கொள்ளை முயற்சி மற்றும் தாக்குதல் சம்பவம், தூத்துக்குடி முழுவதும் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Horror tanker truck at midnight 3 people who attacked machetes arrested