ஒரு படத்தைத் தாண்டிய விவகாரம்…! - தணிக்கைக்கு எதிராக கமல்ஹாசன் கடும் அறிக்கை
issue that goes beyond just one film Kamal Haasan issues strong statement against censorship
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
தணிக்கை தாமதத்திற்கு எதிராக பல தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த சூழலில், நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கடும் கருத்துகள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இவ்விவகாரம் ஒரு தனி திரைப்படத்தைத் தாண்டி, ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞருக்கும் அளிக்கப்படும் இடத்தை சோதிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.சினிமா என்பது ஒரே ஒரு நபரின் உழைப்பல்ல; எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், சிறு தொழில்கள் என ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அதனைச் சார்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தெளிவின்மை படைப்பாற்றலை முடக்குகிறது; அதேசமயம் பொருளாதார ஓட்டத்தையும் பொதுநம்பிக்கையையும் பாதிக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் திரைப்பட ரசிகர்கள் முதிர்ச்சியும் பகுத்தறிவும் கொண்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என தெரிவித்த கமல்ஹாசன்,தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு, பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் எழுத்துப்பூர்வ விளக்கம் ஆகியவற்றுடன் கூடிய கொள்கை ரீதியான சீர்திருத்தம் அவசியம் என வலியுறுத்தினார்.
“முழு திரைப்படத் துறை ஒன்றிணைந்து அரசு நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை தொடங்க வேண்டிய தருணம் இது. இப்படியான சீர்திருத்தமே படைப்பு சுதந்திரத்தையும் அரசியலமைப்பு மதிப்புகளையும் காக்கும்” என தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.
English Summary
issue that goes beyond just one film Kamal Haasan issues strong statement against censorship