விஜய்யின் லண்டன் பயணம் தாமதமாகிறதா? மலேசிய பிரதமர் சென்னை வருகை!ஆளுநரிடம் இருந்து வந்த போன் கால்!பிளானை மாற்றும் முதல்வர்? - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த லண்டன் பயணம் தாமதமாகலாம் என கோட்டை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னை வர உள்ள நிலையில், அவரை சந்திப்பதற்காக விஜய் தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்தப் பயணத்தின்போது தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு சந்திப்புகளை நடத்தவும், அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முதல்வர் விஜய் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கும் நேரில் சென்றிருந்தார். தூதரக பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளுக்காக அவர் அங்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் விஜய்யின் லண்டன் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது அந்த பயணமே தாமதமாகலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 11 மற்றும் 13ஆம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா வருகை தரும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அவர் சென்னை வர உள்ளதாகவும், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய பிரதமர் சென்னைக்கு வர உள்ள அதே காலகட்டத்தில் முதல்வர் விஜய் லண்டனில் இருந்தால், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற முடியாத சூழல் உருவாகும். இதனால் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தை சற்று தள்ளிவைக்கலாமா என்ற ஆலோசனை எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மலேசிய பிரதமரின் சென்னை வருகையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கோட்டை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

மலேசிய பிரதமர் குறிப்பாக முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக சென்னை வர திட்டமிட்டுள்ள நிலையில், அந்த முக்கியமான சந்திப்பை தவிர்க்க வேண்டாம் என்றும், அதற்கேற்ப வெளிநாட்டு பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஆளுநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனால் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்க இருந்த லண்டன் பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை பயணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் போனால், அதன்பிறகு மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட இடைத்தேர்தல் பணிகள் முக்கியத்துவம் பெறுவதால், லண்டன் பயணம் மேலும் சில வாரங்களுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையே, மலேசிய பிரதமரின் சென்னை வருகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், கிண்டியில் உள்ள லோக்பவனில் அவரை வரவேற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய்–மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்திப்பு நடைபெறுமா, விஜய்யின் லண்டன் பயணம் எப்போது மாற்றியமைக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை இந்த விவகாரம் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Vijay trip to London being delayed Malaysian Prime Minister visits Chennai A phone call from the Governor Is the Chief Minister changing plans


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->