கைது நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையா...? சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி அதிரடி முன்ஜாமின் மனு...!
Is this hindrance arrest process Senthil Balaji anticipatory bail petition Chennai High Court
த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் பரபரப்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சில எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, தனக்கு ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையின்போது கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதில் ஜூலை 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆனால், குறிப்பிட்ட நாளில் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனால் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லும் வாய்ப்பைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' அறிவிப்பு அனுப்பப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சம்மன் அனுப்புவதா அல்லது சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தச் சூழலில், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், த.வெ.க. எம்.எல்.ஏ. தொடர்பான பேரம் விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முன்ஜாமீன் மனு, வழக்கின் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகளில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
Is this hindrance arrest process Senthil Balaji anticipatory bail petition Chennai High Court