'தண்ணீரும் கரண்டும் தர்றதுல கூட தாமதமா'...? 'இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி'...! - தமிழக அரசை வறுத்தெடுத்த எச்.ராஜா...!
Is it too late provide water and spoon This injustice people H Raja blasts Tamil Nadu government
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் விநியோகக் குறைபாடு பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வருவதாகவும், இதனால் மக்கள் போராட்டக் களத்தில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான ஊரப்பாக்கம் அருகேயுள்ள கீரைப்பாக்கம், நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட கருவாழக்கரை கிராமம் உள்ளிட்ட இடங்களில், பல நாட்களாக சீரான குடிநீர் வழங்கப்படாததால் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிருப்தியடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் போராட்டங்களால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் சாலை மறியல் போராட்டங்கள், குடிநீர் தட்டுப்பாடு என்பது தனிப்பட்ட பகுதி பிரச்சினை அல்ல; மாநிலம் முழுவதும் பரவி வரும் அடிப்படை வாழ்வாதார நெருக்கடியின் வெளிப்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக கிடைத்து வந்த குடிநீர் விநியோகம் தற்போது பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கான காரணங்களை அரசு உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கோடைக்காலம் முடிவடைந்த பின்னரும் குடிநீர் பற்றாக்குறை தொடர்வது நிர்வாகத் திட்டமிடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதும், நீர்வள மேலாண்மை பணிகளில் போதிய கவனம் செலுத்தப்படாததும் தற்போதைய குடிநீர் நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலம் பராமரிக்கப்பட வேண்டிய நீர்நிலைகள் மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உடனடியாக கூடுதல் நிதி ஒதுக்கி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் முன்அறிவிப்பின்றி நிகழ்ந்த மின்வெட்டு சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கிய நிலையில், தற்போது குடிநீர் விநியோகத்திலும் சிக்கல்கள் உருவாகியிருப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற சேவைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலம்தான் ஆனது என்ற காரணத்தை தொடர்ந்து முன்வைப்பதை விட மக்களின் அன்றாட தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Is it too late provide water and spoon This injustice people H Raja blasts Tamil Nadu government