சட்டசபை தேர்தல் 2026; தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 17 முதல் நேர்காணல்; துரைமுருகன் அறிக்கை..!
Interviews for aspirants seeking to contest on behalf of the DMK to commence on March 17
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 04-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
அடுத்ததாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 17 முதல் 22ஆம் தேதி வரை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவுள்ளார்.
இது குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
'' மார்ச் 17ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் காலை 09 மணிக்கு நடைபெறும். அன்று மாலையில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணலை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மார்ச் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களும், மார்ச் 21-ஆம் தேதி திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் திமுக நேர்காணல் நடத்துகிறது.
மார்ச் 22-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. குறிப்பிட்ட தேதிகளில் விருப்ப மனு அளித்தவர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் மட்டும் உடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Interviews for aspirants seeking to contest on behalf of the DMK to commence on March 17