'வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டும்'...! - மகளிர் உரிமைத்தொகை குறித்து அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி..!
If you make promise you must fulfill it Premalatha Vijayakanth questions government about women rights
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடித்து வரும் அக்கட்சியினர், ஆண்டுதோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,"தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.
நிறைவேற்ற முடியாத திட்டங்களுக்கு ஏன் வாக்குறுதி அளிக்க வேண்டும்? பெண்களுக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாதது ஏன்? ‘மாற்றம், மாற்றம்’ என்று தொடர்ந்து பேசப்பட்டாலும், தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தே.மு.தி.க.வை பொறுத்தவரை தி.மு.க.வுடனான கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தேர்தலில் ஒரு கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்றவுடன், அமைச்சர் பதவிக்காக கூட்டணியை மாற்றிச் சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
அதுபோன்ற சூழ்நிலையில், எனக்கும் கூட்டணி மாறுவதற்கான அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை.
தே.மு.தி.க.வின் கூட்டணி நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும் எங்களது கூட்டணி முடிவில் மாற்றம் இருக்காது.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
English Summary
If you make promise you must fulfill it Premalatha Vijayakanth questions government about women rights