'அவதூறு பேச்சுக்கு கைது செய்ய வேண்டும்'... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது தவெக அதிரடி புகார்...!
He should be arrested defamation AIADMK former minister RP Udayakumar faces swift action complaint
தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த கடுமையான விமர்சனங்கள் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பேரவையின் மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார். அப்போது அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலம், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.
விஜய் அ.தி.மு.க.வை கைப்பற்றவும், அதன் அரசியல் வளர்ச்சியை சீர்குலைக்கவும் முயற்சிப்பதாக ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.தொடர்ந்து காவிரி நீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், நடிகை திரிஷா தொடர்பாக அ.தி.மு.க.வினர் எழுப்பி வரும் கேள்வியையும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை சந்தித்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழக முதல்-அமைச்சர் குறித்து அவமதிக்கும் வகையிலும், தரக்குறைவான முறையிலும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை அவர் வெளியிட்டு வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறு கருத்துகளையோ, தனிநபர்களை விமர்சிக்கும் வகையிலான பேச்சுகளையோ வெளியிடாத வகையில், ஆர்.பி. உதயகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.புகார் மனு பெறப்பட்டதைத் தொடர்ந்து, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பேச்சின் தன்மை, புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் அமைச்சரின் பேச்சும், அதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரும் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
He should be arrested defamation AIADMK former minister RP Udayakumar faces swift action complaint