இது என்ன புது விதமான நடவடிக்கை...? லஞ்ச புகாரில் கணவர் பதவி பறிப்பு... மனைவிக்கு புதிய பதவி வழங்கிய தவெக...!
What kind new action this Husband stripped position bribery complaint Wife given new position
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க.வில் முன்னாள் நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. லஞ்சப் புகாரில் சிக்கி கட்சி பொறுப்பையும், கட்சி உறுப்பினர் பதவியையும் இழந்த வீராசாமியின் மனைவிக்கு தற்போது அதே மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க. இணை செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் வீரா என்ற வீராசாமி செயல்பட்டு வந்தார். அவர் மீது லஞ்சப் புகார் எழுந்ததை தொடர்ந்து, கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.இதன் ஒரு பகுதியாக வீராசாமியிடம் இருந்த கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டதுடன், அவரை கட்சியில் இருந்தும் நீக்கினர்.
இந்த நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க. தலைமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க. தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் விஜய், கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார்.
அதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு ஹேமாவதிக்கு வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புதிதாக நியமிக்கப்பட்ட ஹேமாவதி, ஏற்கனவே அதே பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வீராசாமியின் மனைவி ஆவார்.
கணவர் வகித்து வந்த அதே பொறுப்பு தற்போது அவரது மனைவிக்கு வழங்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வீராசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவருடைய மனைவிக்கு அதே பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனால் செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க.வில் புதிய சர்ச்சையும், உள்கட்சி சலசலப்பும் உருவாகியுள்ளது.
English Summary
What kind new action this Husband stripped position bribery complaint Wife given new position