ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள்; தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்திய போலீசார்..!
Students marching towards Jharkhand Assembly lathi charged and tear gas fired
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவ, மாணவியர் மீது போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தலைநகர் ராஞ்சியில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி முதல் மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாணவர் சங்கத்தின் மூத்த தலைவர்கள் தேவேந்திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார் பால் (30), சவிதா குமாரி (28), ஹபிபா (27) ஆகியோர் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். அத்துடன், இவர்கள் 05 பேரும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) அரசு 06 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஆனால், இதுவரை எந்த உடன்பாடு எட்டப்படவில்லை. அத்துடன், மாணவர்களை சமாதானப்படுத்த ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்த சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டே நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ராஞ்சியில் நேற்று சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்ட, சட்டசபை வளாகத்திற்குள் முன்னேறினர். அப்போது சிலர் போலீஸார் மீது பாட்டில்கள், காலணிகளை வீசி தாக்குதலும் நடத்தினர்.
பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாணவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் நடனம் ஆடினர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு, காவல்துறையினர் 04 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில மாணவர் சங்க தலைவர் தேவேந்திர நாத் மஹதோ கூறியதாவது;
''மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு தடியடி நடத்துகிறது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம்''என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஜார்க்கண்ட் அரசு தரப்பில் ''மாணவர்கள் தரப்பில் 06 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில், 04 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது''என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
English Summary
Students marching towards Jharkhand Assembly lathi charged and tear gas fired