இன்ஸ்டா வலையில் விழுந்த சிறுமி...! நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு டிரைவரை கைது செய்த காவலத்துறை...!
girl who fell into Instagram trap police rescued kidnapped girl Nellai and arrested driver
நெல்லையில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற 21 வயது இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.நெல்லையைச் சேர்ந்த தம்பதியரின் 17 வயது மகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.

செல்போனில் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்த அவருக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகனான செல்வராஜ் என்ற 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.தொடக்கத்தில் சாதாரண அறிமுகமாக இருந்த இவர்களது தொடர்பு, நாளடைவில் நெருக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.
செல்வராஜ் சிறுமியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன், தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவருடன் தொடர்ந்து பழகியதாக தெரிகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். மகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், செல்வராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து காவலர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று சிறுமியையும் செல்வராஜையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மீட்கப்பட்ட 17 வயது சிறுமி, பின்னர் அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
girl who fell into Instagram trap police rescued kidnapped girl Nellai and arrested driver