அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி… பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது...! - மு.க.ஸ்டாலின்
Good news government employees old pension scheme reintroduced MK Stalin
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ–ஜியோ, போட்டா–ஜியோ ஆகிய அமைப்புகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.
இதன் உச்சமாக, வருகிற 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அவை ஏற்கனவே அறிவித்திருந்தன.இந்த கோரிக்கைகள் தொடர்பாக, கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு, சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தீர்வு இன்றி முடிவடைந்தது.

இதனால், அரசு–ஊழியர்கள் மோதல் மேலும் தீவிரமடைந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடியே நடைபெறும் என கூட்டமைப்புகள் உறுதியாக தெரிவித்தன.இந்த பரபரப்பான சூழலில், ஓய்வூதிய விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான உயர்மட்ட குழு, தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
இதன் பின்னணியில், வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டிருந்த சங்கங்களை அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில், அமைச்சர் தங்கம் தென்னரசும் பங்கேற்றார்.
ஜாக்டோ–ஜியோ, போட்டா–ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக சந்தித்து, அமைச்சர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை முடிவில், சங்கங்களின் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"ஓய்வூதிய விவகாரத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல, முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளார் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பின் முழு விவரம் வெளியான பிறகு, அதன் பயன்களை ஆய்வு செய்து எங்களின் அடுத்த கட்ட முடிவுகளை அறிவிப்போம்” என்று தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
கடைசி மாத ஊதியத்தின் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அந்த 50% தொகையில் 10% ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
பழைய ஓய்வூதிய பலன்களை வழங்கும் புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” செயல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போன்று அகவிலைப்படி உயர்வும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்.
Tamil Nadu Assured Pension Scheme (TAPS) நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
பணிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், நீண்ட காலமாக நிலவி வந்த ஓய்வூதிய குழப்பத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Good news government employees old pension scheme reintroduced MK Stalin