போதை இல்லா தமிழகமே இலக்கு! - ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் உறுதியேற்ற முதலமைச்சர் விஜய்...!
goal drug free Tamil Nadu Chief Minister Vijay made commitment with thousands of students
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தி, இளைய தலைமுறையை அதன் பிடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு காவலர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அந்த மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் சல்யூட் செய்து ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து, அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளும் நடைபெற்றன. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் காணொலி வாயிலாக பார்வையிட்டார்.
தொடர்ந்து, “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற பெயரில் விழிப்புணர்வு இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியையும் ஏற்றார்.“போதைப்பழக்கத்திற்கு ஒருபோதும் அடிமையாக மாட்டேன். போதைப்பொருட்களின் தீமைகளை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பேன்.
போதைப்பொருள் ஒழிப்பில் என்னால் முடிந்த பங்களிப்பை முழுமையாக வழங்குவேன்” என்ற உறுதியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களையும் பாராட்டினார். அவர்களின் விழிப்புணர்வு பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளையும் வழங்கினார்.போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்னையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி, பொதுமக்களுடன் இணைந்து அவரும் ஓட்டத்தில் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
goal drug free Tamil Nadu Chief Minister Vijay made commitment with thousands of students