தமிழக அரசு மக்களின் பாதுகாப்பான, சிரமமில்லா வாழ்க்கைக்கு உதவ வேண்டும் - ஜி கே வாசன்.!!
gk vasan statement jan 01
சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்றவும், மின்கம்பிகள் அறுந்து விழாமல் இருக்க மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜி கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் 2 நாட்கள் முன் தினம் பெய்த திடீர் கனமழையாலும், நேற்று பெய்த மழையாலும் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாள் மழையால், பல பகுதிகளில் தேங்கிய தண்ணியால் பொது மக்களின் நடமாட்டமும், வியாபாரமும், போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. தேங்கியிருக்கும் தண்ணீரானது இன்னும் வடியவில்லை, முழுமையாக அகற்றப்படவும் இல்லை.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தொடர்ந்து 2 நாட்களுக்கு மழையோ, அதி கனமழையோ நீடிக்கும் என்பதால் தொடர்ந்து தண்ணீர் தேங்கி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும். குறிப்பாக நேற்று முன் தினம் மட்டும் மதியம் முதல் இரவு வரை இடைவிடாமல் சுமார் 20 செ.மீ அளவுக்கு பெய்த மழையால் சென்னை ஸ்தம்பித்துவிட்டது. மின் கம்பம், மின் கம்பிகள் ஆகியவற்றால் உயிரிழப்பும் ஏற்பட்டது. இது மிகவும் வேதனைக்குரியது.
எதிர்பாராமல், வானிலை ஆய்வு மைய அறிவிப்பும் இல்லாமல் சில நேரங்களில் மழை, கனமழை, வெள்ளம் ஏற்பட்டால் அது அரசுக்கு சவாலாக இருக்கும் என்பதில் மற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே சமயம் அத்தகைய திடீர் சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய அவசிய, அவசர நடவடிக்கை இனிமேல் இருக்க வேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு மழைநீர் தேங்கும் பகுதிகளில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து உடனுக்குடன் ஆய்வு செய்து தண்ணீரை அவ்வப்போதே வெளியேற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதே போல மின் கம்பம், மின் கம்பிகள் ஆகியவையும் மழையினால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பொது மக்களின் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பது மிக மிக அவசியம். இதற்காக மின்சாரத்துறை முன்னெச்சரிக்கையாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின்சாரம் செலுத்துவதற்கும், பொது மக்களின் பாதுகாப்பிற்கும் துணை நிற்க வேண்டும்.
எனவே தமிழக அரசு, கடந்த 2 நாள் மழை, தொடர்ந்து பெய்யும் மழை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மழைநீரை உடனடியாக அகற்றக்கூடிய நிலையை ஏற்படுத்தவும், மின்சாரத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டும் மக்களின் பாதுகாப்பான, சிரமமில்லா வாழ்க்கைக்கு உதவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
English Summary
gk vasan statement jan 01