'விவசாயிகள் ஏமாற மாட்டார்கள்...!' பாஜகவின் போலி முகத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்...! - மாணிக்கம் தாகூர் தாக்கு
Farmers will not be fooled people Tamil Nadu know fake face BJP very well Manickam Thakur attacks
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் கர்நாடக பாஜகவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"கர்நாடகாவில், "தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர்கூட வழங்கக் கூடாது" என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் முதல்-அமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா, நயினார் நாகேந்திரன்? ஒருவேளை அந்த நிகழ்வை தவறவிட்டிருந்தால், அதற்கான புகைப்படங்களும் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவுகளும் அதற்கு சாட்சியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கர்நாடக பாஜக தலைவர்களையும், எடியூரப்பாவையும் பகிரங்கமாகக் கண்டிக்க உங்களுக்கு அரசியல் துணிச்சல் உள்ளதா? அல்லது அமைதியாகவே இருப்பீர்களா? என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் நியாயமான காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடமோ அல்லது மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒருமுறையாவது வலியுறுத்திப் பேசியுள்ளீர்களா? மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்றும் அவர் வினவியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிப்பதும், டெல்லியில் மத்திய அரசின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை புறக்கணிப்பதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாஜகவின் முரண்பாடான அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இந்த இரட்டை நிலைப்பாடு, அரசியல் நாடகம் மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சிகளை தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், உண்மையை மக்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் தனது பதிவில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
English Summary
Farmers will not be fooled people Tamil Nadu know fake face BJP very well Manickam Thakur attacks