ஈரோடு இரட்டைக்கொலை சம்பவம்: குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு..!
f the culprits of the Erode double murder incident are not found then we will continue the hunger strike Annamalai announcement
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் இருவரும் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மே 20 முதல் தமது தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இடம்பெறும் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகிரியில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட பேசியதாவது;

எங்கேயும் பார்த்திடாத, கேட்காத, கோழைத்தனமான, மூர்க்கத்தனமான மிருகங்களை விட கொடூரமான சில மனிதர்களால் இந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. காவல்துறை மீது கோபம் உள்ளது. ஆனால் காவல்துறையை எப்போதும் விட்டுக் கொடுப்பவர்கள் நாம் அல்ல என்று பேசியுள்ளார்.
அத்துடன், இன்றைக்கு காவல்துறை தம்முடைய வேலையை சரியாக செய்யவில்லை என்ற கோபம் வந்துள்ளதாகவும், காவல்துறையினர் எங்கேயோ கோட்டை விடுகின்றனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், 2022-இல் பாலியல் வன்கொடுமைகள் 1319, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் 4949, 03 ஆண்டுகளில் போக்சோ குற்றங்கள் 16518 நடந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே உறுதியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், மேலும் சட்டம் ஒழுங்கானது முதல்வர் ஸ்டாலின் கையை விட்டுச் சென்றுவிட்டதுதாகவும், அதனை கட்டுப்படுத்தக்கூடிய திறன் இந்த ஆட்சிக்கு இல்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், எப்போது தேர்தல் வரும் என்று நினைத்து ஏங்கிக் கொண்டு இருப்பதாகவும், 2026 ஏப்ரலில் நடத்த வேண்டிய தேர்தலை நாளைக்கே நடத்தி விடலாமே? என்றும், நல்ல ஒரு திறமை வாய்ந்த, இதுபோன்ற விஷயங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய முதல்வர் நமக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு கொலை வழக்கில் இன்னும் 02 வாரத்தில் நீங்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பவில்லை என்றால் நாங்கள் இங்கே ஆட்சியில் இருந்தால் நீதிமன்றத்துக்கு எல்லாம் அனுப்ப மாட்டோம் எனவும், துப்பாக்கி எல்லாம் எதுக்கு இருக்கிறது, குண்டெல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் , குறைந்த பட்சம் பயத்தை ஏற்படுத்தவாவது இதை செய்யவில்லை என்றால் மே 20-ஆம் தேதியில் இருந்து இதே சிவகிரியில் நாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் உட்கார போகிறோம் என்று கூறிய அவர் , அதை கலைக்க வேண்டும் என்றால் முதல்வர் தான் இங்கு வர வேண்டும் என்றும், 20-ஆம் தேதி நடக்க உள்ள போராட்டத்தில் நான் அமர்ந்து அதை ஆரம்பித்து வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
f the culprits of the Erode double murder incident are not found then we will continue the hunger strike Annamalai announcement