'புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க திமுக தயாராகி வருகிறது; வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும்'; எடப்பாடி பழனிச்சாமி..!
Edappadi Palaniswami states that the DMK is preparing to seize power through the back door
கடந்த 23 ஆம் தேதி, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் மே மாதம் 04 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இ.பி எஸ், 'கண் துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை கண்கூடாகக் கண்டோம் என்றும், விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், எப்படியாவது புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு தயாராக உள்ளதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் முகவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, வாக்கு எண்ணிக்கை நாளன்று எக்காரணம் கொண்டும் முகவர்கள் கால தாமதமாக செல்லக் கூடாது என குறிப்பிட்டுள்ளதோடு, வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் மாறுதல்கள் இருக்கும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைத்த பின்னர்தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami states that the DMK is preparing to seize power through the back door