அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சியிலிருந்து நீக்கம்; நாளை தவெகவில் இணையவுள்ளார்..?
Edappadi Palaniswami removes former AIADMK minister S Valarmathi from the party
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து, அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தவெகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி, பரமக்குடி முருகேசன் மற்றும் நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். அடுத்து, முன்னாள் எம்.எல்.ஏவான விஜயதாரணியும் பாஜகவில் இருந்து விலகி, தற்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இதில், சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வரும் சூழலில், அதிமுகவின் இன்னொரு முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர், கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, கட்சி மாறுவது குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் அவரும் நாளை தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது..!
English Summary
Edappadi Palaniswami removes former AIADMK minister S Valarmathi from the party