நகர்ப்புறங்கள் நலம் பெறுவதற்கு பா.ம.க.வுக்கு வாய்ப்பளியுங்கள்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடிதம்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புறங்கள் நலம் பெறுவதற்கு பா.ம.க.வுக்கு வாய்ப்பளியுங்கள் என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களே!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் தான் உள்ளாட்சி ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழ்நாட்டு நகர்ப்புற மக்கள், தங்களின் தீர்ப்பை எழுதப் போகும் நாள். அதை தீர்மானிப்பதற்கு முன்பாக, ‘‘ஏன் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?’’ என்பதை விளக்கவே இந்தக் கடிதம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு நாளை மறுநாள் 19-ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பாக பரப்புரை நிறைவு செய்யப்படுவதற்கு காரணமே, வாக்காளர்கள் தங்கள் வாக்கு யாருக்கு? என்பதை எந்தத் தலையீடுமின்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த வகையில் அடுத்த 48 மணி நேரம் வாக்காளர்களாகிய  உங்களுக்கு மிகவும் முக்கியமான நேரம் ஆகும். அந்த நேரத்தை மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டு, நல்லவர்களுக்கு வாக்களிக்க முடிவெடுத்தால் தான் அது நாட்டுக்கு நல்லதாக அமையும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது ஏதோ நூற்றுக்கணக்கில் வாக்குகளைக் கொண்ட அமைப்புகளின் உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் தேர்தல் அல்ல. இது தனித்தனி அரசுகளுக்கு நடத்தப்படும் தேர்தல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 12-ஆவது அட்டவணையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 18 அதிகாரங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலில் தொடங்கி, சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், பொது சுகாதாரம்,  குடிசைகளை மாற்றி வீடு கட்டித் தருதல், வறுமை ஒழித்தல், வீடுகளுக்கு குடிநீர் வழங்குதல் உட்பட  18 வகையான பணிகளை விதிகளுக்கு உட்பட்டு நகராட்சி அமைப்புகளே செயல்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இந்த அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த அரசும் வழங்குவதே கிடையாது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்கள் அதைப் பயன்படுத்தி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுமையாக செயல்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்வார்கள். உள்ளாட்சிகளில் உண்மையான மக்களாட்சியை பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏற்படுத்துவர்கள். அது தான் உண்மையான நல்லாட்சியாக இருக்கும். அது அமைவதை உறுதி செய்வது மக்களின் கைகளில் தான் இருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர் மக்கள் பணியையே முழுநேரப் பணியாக செய்வார்கள். தேர்ந்தெடுத்த மக்கள் அழைத்தால் நேரம் பார்க்காமல் ஓடி வந்து உதவுவர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதிகள் அதிகாரத்தை சுவைப்பவர்களாக இருக்காமல், மக்களின் நலனுக்காக அதிகாரத்தை சுமப்பவர்களாக இருப்பார்கள்.

‘‘உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து எழும் போது, தங்களின் உடைகளில் ஒட்டும் தூசியைக் கூட தட்டிவிட்டு வர வேண்டும்; உள்ளாட்சிகளிலிருந்து தூசைக் கூட எடுத்து வரக்கூடாது’’ என்று பயிற்சி வகுப்புகளின் போது நான் கூறுவேன். அதைக் கடைபிடித்து பா.ம.க. நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள்.

ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் குவித்து வைத்திருக்கும் பணத்தை வாரி இறைத்து வாக்குகளையும், அதன் மூலம் வெற்றிகளையும் விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். அதில் அப்பாவி மக்கள் ஏமாந்து விடக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்வதற்கான அமைப்புகள். உங்கள் தெருவைச் சேர்ந்தவர்களோ, உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரரோ வெற்றி பெற்று பதவிக்கு வருவது உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் தான் சாத்தியமாகும்.

 

நம்மில் ஒருவரை உள்ளாட்சி அமைப்புக்கு தேர்ந்தெடுத்தால் மட்டும் தான் நமக்கான உரிமைகளை அவர்களிடமிருந்து கேட்டுப் பெற முடியும். மாறாக, ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களித்தால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கொள்ளையடிப்பதை மட்டும் தான்  வேடிக்கை பார்க்க முடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது.

மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் கடந்து உள்ளாட்சித் தேர்தல்கள் தான் மிகவும் முக்கியமானவை. அது தான் மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றி வைக்கும் அதிகாரம் கொண்டவை. அத்தகைய பதவிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தால், மக்களுக்கு நன்மை கிடைக்கும்; நகர்ப்புறங்களுக்கு நன்மை கிடைக்கும். அதை உணர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நல்ல மாற்றத்திற்கு இது சிறந்த தொடக்கமாக இருக்கட்டும்." 

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About election 2022 pmk candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->