'வாக்கு கேட்க வராதீர்கள்'...! - ஜெயங்கொண்டத்தில் சுவரொட்டி எச்சரிக்கை, தேர்தல் களத்தில் பரபரப்பு...!
Dont come to ask for votes Poster warning Jayangondam excitement election field
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.வேட்பு மனு திரும்பப்பெறுவதற்கான இறுதி நாள் இன்று (வியாழக்கிழமை) என்பதால், அதற்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் பின்னணியில், அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியின் 5 மற்றும் 6ஆம் வார்டு பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
“வாக்கு கேட்டு வேட்பாளர்கள் எவரும் இந்தப் பகுதிக்குள் வர வேண்டாம்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த சுவரொட்டியில், கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி, சுத்தமான குடிநீர், மின்விளக்குகள், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சுவரொட்டி வெளியீடு, அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Dont come to ask for votes Poster warning Jayangondam excitement election field