சட்டசபையில் திமுக குண்டுக்கட்டாக வெளியேற்றம்...! 'விஜய்யின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்' என துரைமுருகன் சாடல்...!
DMKs expulsion from assembly Vijay speech height indecency says Durai Murugan
“முடிந்துபோன வழக்கை மீண்டும் எடுத்துப் பேசுவது முட்டாள்தனம்; முதலமைச்சர் விஜய்யின் பேச்சு அநாகரிகமானது” என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டசபையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார்.அப்போது, கட்சி நிதி பெற்றதாக முன்வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது முதலமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால், தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கு வந்த அவைக் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. உறுப்பினர்களில் சிலரை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இந்தச் சூழலில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் விஜய்யின் சட்டசபை பேச்சுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,"கம்யூனிஸ்ட் கட்சிகளே முதலமைச்சரின் பேச்சை கடுமையாக விமர்சித்துவிட்டன. சர்க்காரியா ஆணைய வழக்கு தொடர்பாக நீதிமன்றமே எங்களை நிரபராதிகள் என்று தெரிவித்துவிட்டது.அவ்வாறு முடிவடைந்துபோன வழக்கை மீண்டும் எடுத்துப் பேசுவது முட்டாள்தனம். முதலமைச்சரின் பேச்சு அநாகரிகமானது” என்று துரைமுருகன் தெரிவித்தார்.
English Summary
DMKs expulsion from assembly Vijay speech height indecency says Durai Murugan